WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 3, 2015

அவல நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி - எப்போது அடிப்படை வசதிகள்?

செங்குன்றம்: வடகரையில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளியை, அமைச்சர்கள் பலமுறை ஆய்வு செய்தும், அடிப்படை வசதிகள் கிடைத்தபாடில்லை. சுகாதாரமான குடிநீர், கழிப்பறை, தங்குமிடம் கிடைக்காததால், மாணவ, மாணவியர் பரிதவிக்கின்றனர்.

செங்குன்றம் அடுத்த வடகரையில், அரசு ஆதிதிராவிட நலத்துறை ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த, 2,000க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிகள், அரசு பொதுத் தேர்வுகள் நடக்கும் மையங்களாகவும் செயல்படுகின்றன. பல ஆண்டுகளாகியும், போதிய அடிப்படை வசதிகளில்லை.

1. வடகரை மேல்நிலை பள்ளியில், சுகாதாரமற்ற வளாகத்தினுள் கால்நடைகளுக்கு மத்தியில், மதிய உணவை மாணவர்கள் சாப்பிடுகின்றனர்.

2. பெண்கள் மேல்நிலை பள்ளியில், பயன்பாடற்ற கூடுதல் வகுப்பறை கட்டடம்.

3. கழிப்­பறை வசதிகள் செய்து தரப்படவில்லை.

தட்டுகளுக்கு தட்டுப்பாடு

* மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, போதியளவு தட்டுகள் இருப்பு இல்லை. அதனால், நான்கு மாணவர்கள் சேர்ந்து, உணவு தயாரித்த பாத்திரத்தின் மூடியில் சாப்பாட்டை மொத்தமாக வாங்கி சாப்பிடுகின்றனர்.

* இட பற்றாக்குறையால், பாதுகாப்பற்ற சூழலில், மரத்தடியில்தான் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. அந்த உணவும் தரமற்றதாக உள்ளதால், அதை சாப்பிட முடியாமல் அவர்கள் கீழே கொட்டுகின்றனர்.

* கீழே கொட்டப்பட்ட உணவை உண்ண ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் அங்கு காத்திருக்கின்றன. சில நேரம், அவை அத்துமீறி மாணவர்கள் வைத்திருக்கும் உணவை சாப்பிடுகின்றன.

* பல மாணவர்கள், சாலையோரம் உள்ள நடைபாதை கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர்.

* குடிநீரை கூட தாராளமாக குடிக்க முடியாத நிலையில், மூன்று குழாய்கள் மட்டும் சுவரோடு பதிக்கப்பட்டு உள்ளன.

* ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் வசதியில்லாததால், ஐந்து கழிப்பறைகளும் பயன்பாடின்றி உள்ளன. கழிப்பறையை சுற்றி செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து, பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தஞ்சம் அடைந்துள்ளன.

* பெண்கள் பள்ளியின் மூன்று கழிப்பறைகளில், இரண்டு பயன்பாடற்று உள்ளன. அவற்றை சுற்றியும், முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மாணவியர், அங்கு சென்றுவர அஞ்சுகின்றனர்.

* ஐந்துக்கும் அதிகமான பயன்பாடற்ற கூடுதல் பள்ளிக்கட்டடம், சமையலறை கட்டடம், விழா மேடை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறிய நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.

* மதிய உணவிற்கான அரிசி, பருப்பு, முட்டை இருப்பு வைக்கும் கட்டடமும், ஜன்னல் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

* பள்ளிக்கு அருகில் உள்ள மாணவியர் விடுதி வளாகமும், செடி, கொடிகள் சூழ்ந்து காடு போல் உள்ளது. அங்கு தங்கி உள்ள மாணவியர், தெருக் குழாயில் இருந்து தான் குடிநீரை பிடித்து பயன்படுத்துகின்றனர்.

* விடுதியில், சுகாதாரமற்ற வகையில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அங்குள்ள, வடகரை ஊராட்சிக்கான பெரிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிதிலமடைந்துள்ளதால், புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இதுவரை அகற்றப்படாமல் பகுதிவாசிகளையும், மாணவ, மாணவியரையும் அச்சுறுத்துகிறது.

மொத்தத்தில், 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பள்ளிக்கு, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அத்தியாவசியமான அடிப்படை வசதிகள், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிராவிட நலத்துறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட அமைச்சர்கள், ஒவ்வொரு ஆண்டும் விழாக்களில், பள்ளியை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்தனர். ஒருசில ஆண்டுகளில், ஆய்வு என்ற பெயரில் பள்ளிக்கு சிலர் வருகின்றனர். ஆனால், எந்த வசதியும் இன்னும் கிடைக்கவில்லை. பள்ளி நிர்வாகம் தரப்பில் கேட்ட போது, இதுகுறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது. மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என, கூறப்பட்டது.

பாதுகாப்பான கழிப்பறைகள் இல்லை; குடிநீர் வசதி இல்லாததால், வீட்டில் இருந்து எடுத்து வர வேண்டியுள்ளது. பல நுாறு மாணவியர் படிக்கும் பள்ளியில், 10 பேர் பயன்படுத்தக் கூடிய ஒரே கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதுவும், பாதுகாப்பற்ற முட்புதருக்குள்.

- மாணவியர்

கால்நடைகளை போல், நாங்கள் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. தரமற்ற உணவு தரப்படுவதால், எங்களால் சாப்பிட முடியவில்லை; வேறு வழியின்றி சாப்பிடுகிறோம். கடந்தாண்டு, 10ம் வகுப்பு படித்த எங்களுக்கு, கல்வி உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை.

- மாணவர்கள்

பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால், மாலை, இரவு மற்றும் விடுமுறை நாட்களில், அனைத்து சட்டவிரோத செயல்களும் நடக்கின்றன. இதனால் மாணவ, மாணவியரும் திசை மாறிப்போகும் நிலை உருவாகி உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.