பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஏப். 18) நிறைவடைய உள்ளன. மதிப்பெண் விவரங்கள் அனைத்தும் குறுந்தகடுகளில் பெறப்பட்ட பிறகே தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 2,377 தேர்வு மையங்களில் 8.86 லட்சம் மாணவர்கள் எழுதினர். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்று வருகின்றன. கணிதம், வணிகவியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ள நிலையில், உயிரியல் பாட விடைத்தாள்களைத் திருத்தும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. சில விடைத்தாள் மையங்களில் மேலும் சில பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் சனிக்கிழமைக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு, இந்த மையங்களிலிருந்து மதிப்பெண் விவரங்கள் திங்கள்கிழமை முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பெறப்பட உள்ளன. 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பதிவு செய்யப்பட உள்ளன. இந்த மதிப்பெண் விவரங்களைப் பதிவு செய்யும் பணி, சரிபார்க்கும் பணி ஆகியவற்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு வார கால அவகாசம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.