WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 11, 2015

கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால் பணிகள் தொய்வு.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த, கல்வித்துறை
போதிய ஒத்துழைப்பு தராததால், பணிகள் தொய்வடைந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறன், எண்ணிக்கை, பள்ளி கட்டமைப்பு, இதர செயல்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுகிறது. துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும்; நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன. அவ்வாறு தரம் உயர்த்தப்படும் பட்சத்தில், பள்ளிகளில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், உயர்நிலைகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில், 2009 முதல் தற்போது வரை, 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தொகை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை நான்கு பள்ளிகளில் மட்டுமே கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதனால், 2012-13ல் இருந்து தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை சரிந்துள்ளது. மேலும், வசதிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை போதியளவு இருப்பினும், தரம் உயர்த்த பரிந்துரைக்கப்படும் பல பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன. கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததே, பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளியின் இடவசதியை பொறுத்தே, கூடுதல் கட்டமைப்பு ஏற்படுத்த முடியும். தரம் உயர்த்திய பள்ளிகள் சிலவற்றில் மட்டுமே அதற்கான இடவசதி இருந்தது. எஞ்சிய பள்ளிகளில் கட்டமைப்பு அமைக்க, இட வசதியிருப்பதாக கல்வித்துறை ஆய்வு செய்து, ஒப்புதல் தர வேண்டும். தற்போது கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணியை, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் மூலம், பொதுப்பணித்துறை சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.