கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், விண்ணப்பக் கட்டணம் முறைப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழந்துள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 25 என்ற அளவில் வசூலிக்கப்படும்போது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ. 250 முதல் ரூ. 500 வரை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்தக் கல்லூரிகளில் விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
முன்கூட்டியே மாணவர் சேர்க்கை...
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் கூறியது:
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தலைசிறந்த பேராசிரியர்கள் பலர் உள்ளனர். இதுபோல் உள்கட்டமைப்பு வசதிகளும் இப்போது பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே ஆரம்பித்துவிடுவதால், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும், படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர்களும் பிரபல தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர்.
இந்த நிலை காரணமாக அரசு கல்லூரிகளில் உள்ள முழுமையான திறன், வெளிப்படாமலே போய்வருகிறது.
இந்த நிலையை மாற்றும் வகையில், தனியார் கல்லூரிகளைப் போல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியை நடத்த இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், திங்கள்கிழமை விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு, மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்துக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும் என்றனர்.
விண்ணப்பக் கட்டணம் முறைப்படுத்தப்படுமா
இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் திங்கள்கிழமை முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட உள்ளது. சில கல்லூரிகள் புதன்கிழமை (மே 6) விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலனவை விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி வசூலிப்பதை ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கல்லூரிகளில் உள்ளதுபோல் விண்ணப்பக் கட்டணத்தை ரூ. 25 என்ற அளவில்தான் வசூலிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் பதிவுக் கட்டணமான ரூ. 2 மட்டுமே வசூலிக்க வேண்டும்.
ஆனால், இந்த கல்லூரிகள் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை ரூ. 250 முதல் ரூ. 500 வரை நிர்ணயிக்கின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டிலும் பல கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி நிர்ணயித்திருப்பது தொலைபேசித் தகவல் மூலம் தெரியவந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
விண்ணப்பக் கட்டணத்தை முறைபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.