WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 16, 2016

10ம் வகுப்பு தமிழ் தேர்வில் திருக்குறள் புறக்கணிப்பு.

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல் நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதை, 10.72 லட்சம் பேர் எழுதினர். முதல் நாளான நேற்று, வினாத்தாள் மிக எளிமை யாகவே இருந்தது. நன்றாக படிக்கும் திறனுள்ள மாணவர்கள், 100 மதிப்பெண் பெற முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.வினாத்தாளில் மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, சாய்ஸ் அடிப்படையில், 49 வினாக்கள் இடம் பெற்றன. வினாக்களை பொறுத்தவரை, எளிதாக விடையளிக்கும் வகையிலும், குறிப்பிட்ட நேரத்துக்கு, 30 நிமிடங்கள் முன் முடிக்கும் வகையிலும் எளிமையாகவே இருந்தன. சில கேள்விகள், 'ப்ளூ பிரின்ட்'க்கு மாறாக அமைந்திருந்தன. அதாவது, மனப்பாட பாட்டு பகுதியில், ஆறு மூன்று மதிப்பெண்ணுக்கான வாழ்த்துப் பாடல், ஆறு மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருந்தது. அதனால், மாணவர்களுக்கு, மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எட்டு மதிப்பெண்ணுக்கான நெடுவினாவில், செய்யுளில் இரண்டு வினாக்களில், ஒன்று கண்டிப்பாக திருக்குறள் கொடுக்கப்பட்டு, அதன் விளக்கத்தை மாணவர்கள் எழுத வேண்டும். ஆனால், நேற்றைய கேள்வித்தாளில் நெடுவினாவில், திருக்குறளே இடம்பெறவில்லை. அதனால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருக்குறளுக்கு பதில், கம்ப ராமாயணமும், சீறாப்புராணமும் இடம் பெற்றது.

மாணவர்கள் ஏமாற்றம்:
தமிழாசிரியரும், பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகியுமான நீ.இளங்கோ கூறியதாவது:
பத்தாம் வகுப்பில், நான்கு அதிகாரங்களில், 40 திருக்குறள்கள் உள்ளன. இந்த குறள்களை மாணவர்கள் படித்தால், அவற்றிலிருந்து ஒரு நெடுவினா இடம் பெறும். ஆனால், இந்த முறை திருக்குறள் இடம் பெறாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுபோன்ற தேர்வுகளில் வினாக்கள் இருந்தால் தான், அதற்காகவே திருக்குறளை படிப்பர். எனவே, வருங்காலத்தில் திருக்குறளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதேபோல், நெடுவினாக்களில் மொத்தம், 16 மதிப்பெண்களுக்கு, செய்யுள் மற்றும் உரைநடையில், எட்டு கேள்விகள் தரப்பட்டு, இரண்டுக்கு மட்டும் பதில் அளிக்க வேண்டும் என்ற முறை இருந்தது. தற்போது, இந்த வினாக்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், பல மாணவர்கள் இந்த கேள்விகளை எழுத முடியாமல், 16 மதிப்பெண்களை தவற விடும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.