பிளஸ் 2 வேதியியல் தேர்வில் கடின வினாக்கள் இருந்ததாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், 6 மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி
தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு முக்கியப் பாடமான வேதியியல் தேர்வு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.
பலத்த மழை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், பொதுத் தேர்வு வினாத்தாள் அனைவருக்கும் எளிதானதாக இருக்கக்கூடும் என்ற கருத்து மாணவர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
ஆனால், மாணவர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக வேதியியல் தேர்வும், கணிதத் தேர்வும் அமைந்திருந்தன. இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், வேதியியல் வினாத் தாளில் இருந்த கடின வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவியை வேதியியல் பாட ஆசிரியர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினா 17 (பி பிரிவு), அதேபோல, ஏ பிரிவில் 18, வினா எண் 70-இல் பி ஆகிய இரு வினாக்களுக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதிலை அளித்திருந்தாலும் அவர்களுக்கு முறையே 1, 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் வேதியியலில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தேர்வுத் துறையின் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ள தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்கத் தலைவர் சுரேஷ், இதேபோல தினசரி 40 விடைத்தாள் திருத்த வேண்டும் என்ற உத்தரவையும் 36 என குறைத்து தேர்வுத் துறை அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வேதியியல் தேர்வின் விடைக் குறிப்புகள் இந்தத் திருத்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும், இந்த விடைத் தாள்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.