பள்ளி, கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கான மன நல ஆலோசகர் பணியிடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குரைஞர் இ.ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் மிரட்டப்படுவதால், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்வதற்குக்கூட அவர்களால் முடியவில்லை. ஆகையால், குற்றவாளிகள் தப்பிவிடுவதுடன் குற்றங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றன. ஒவ்வொரு பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலும் மனநல ஆலோசகர்களை முழுநேரப் பணியாளர்களாக நியமித்தால் மட்டுமே, குழந்தைகள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியே கொண்டுவருவர்.  எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனநல ஆலோசகரையாவது முழு நேரப் பணியில் பணியமர்த்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேணடும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை ஏற்று மனநல ஆலோசகர்களை உடனடியாக நியமிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது. ஏனெனில் அதற்கு தகுதியான, பயிற்சி பெற்றவர்கள் கிடைப்பது கடினம். ஆகையால், பணியிடங்களை உருவாக்க தகுந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும். மேலும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவரிடம் மனுதாரர் முறையிடலாம். இதுதொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு 2 மாதத்துக்குள் எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.