ஆசிரியர் தினத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள்
மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ் படைத்தவர்! அவர் பிறந்த நாள் - செப்டம்பர் 5ஆம் நாள், “ஆசிரியர் தினம்” என ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கழக ஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகைகளையெல்லாம் பறித்ததுடன்; அந்தச் சலுகைகளைகளை மீண்டும் வழங்கிடக் கோரிப் போராடிய ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் நள்ளிரவு நேரத்திலும், பெண்கள் என்று பாராமலும், வீடு புகுந்து கைது செய்தும், ஏறத்தாழ 1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்-அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தும் கொடுமை புரிந்தது இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசு ஒன்றுதான் என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
அத்துடன், அண்மைச் சில ஆண்டுகளாக, 'தகுதித் தேர்வு' என்ற ஒன்றைப் புகுத்தி, அதையும் ஆண்டுதோறும் நடத்திடாமல், ஆசிரியர் பயிற்சி பெற்ற பலர் வேலை கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் நிலையை இன்றைய அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆசிரியர் சமுதாயம் அடைந்திடும் இன்னல்களை எண்ணி வேதனைப்படாமல் இருந்திட முடியவில்லை.
இந்நிலையில் ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆசிரியர் அனைவர்க்கும் எனது 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.