WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 23, 2026

தள்ளிப் போகிறது பொறியியல் கலந்தாய்வு - சிபிஎஸ்இ குளறுபடி, நீட் மறுதேர்வு தாக்கம்.

 

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி மற்றும் நீட் மறுதேர்வு காரணமாக இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் இடங்களிலும், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர இந்த ஆண்டு 2.23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள், ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி ஜூன் 8-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்தப் பணிகள் முடிந்து, வரும் 29-ம் தேதி மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பொறியியல் கலந்தாய்வு தேதி 29-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்டில் முடிவடையும். ஆனால், இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் ஆன்லைன் மதிப்பீட்டில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டதன் காரணமாக பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் மறுதேர்வு கடந்த 21-ம் தேதிதான் நடந்துள்ளது. நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர்.

அதனால், தேர்வு முடிவை வெளியிட குறைந்தபட்சம் 2 வாரங்களாவது ஆகும். அதன்பிறகு எம்பிபிஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று தரவரிசை பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வு நடத்த எப்படியும் ஒரு மாதம் ஆகிவிடும். இதற்கிடையே, சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவுகளும் வெளியிடப்பட வேண்டும்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் மறுமதிப்பீட்டுக்கும் விண்ணப்பித்திருப்பார்கள். மறுமதிப்பீட்டில் அவர்களது மதிப்பெண் உயர்ந்தால், அது பொறியியல் தரவரிசையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே, பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். தற்போது சிபிஎஸ்இ விடைத்தாள் பிரச்சினை மற்றும் நீட் மறுதேர்வால் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பொறியியல் கலந்தாய்வை தள்ளிவைக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் வருகிற 25-ம் தேதி வழங்க சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

நீட் மறுதேர்வு முடிவு விரைவாக வெளியிடப்பட்டால், பொறியியல் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.