தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையில் 9,733 அரசு நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆறு முதல் 8 ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,
சமூகஅறிவியல் பாடங்களுக்கு தனித்தனியாக பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10 மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமிக்கின்றனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் இல்லை. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொடக்கக் கல்வித்துறையில் பெற்ற விபரம்: 9,733 நடுநிலைப் பள்ளிகளில் ஆயிரம் தமிழாசிரியர்கள், 5,019 ஆங்கிலம், 5,610 கணிதம், 5,146 அறிவியல், 1,016 சமூக அறிவியல் ஆசிரியர்கள் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் 4,500 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் இல்லை; 8,500 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தமிழ், சமூகஅறிவியல் ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நடுநிலைப் பள்ளிகளில் தலைமைஆசிரியரை தவிர்த்து ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 3 பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டுமென, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறையும் காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமித்தால் மட்டுமே அரசு பள்ளிகளை மீட்க முடியும். அதுவரை மத்திய அரசு அறிவுறுத்தல்படி பாரபட்சமின்றி அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் குறைந்தது 3 பட்டதாரி ஆசிரியர்களையாவது நியமிக்க வேண்டும், என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனைவருக்கும் கல்வி மூலம் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இடமாறுதல், பணி ஓய்வு பெற்ற இடங்களில் மட்டும் ஓரிரு பட்டதாரி ஆசிரியர்கள் குறைவாக இருக்கலாம். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே தமிழ், சமூகஅறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ,' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.