Thursday, November 17, 2016
பணம் தட்டுப்பாடு: ஊதியத்தை ரொக்கமாக அளிக்க தலைமை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.
மத்திய அரசால் கடந்த வாரம் ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில், புதிய தாள்களைப் பெறுவதற்கும், ஏடிஎம் மையங்களில் எடுப்பதற்கும் நீடித்து வரும் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர், முனைவர் சாமி. சத்தியமூர்த்தி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவிவரம்:
மத்திய அரசு கடந்த வாரம் ரூ.500, ரூ. 1000 பணத்தாள்கள் செல்லாது என அறிவித்தது. அது மட்டுமின்றி தனிநபர் வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்யவும் மிகுந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. வங்கிகளில் பணம் எடுப்பதற்கு கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் ஏடிஎம் மையகளிலும் பணம் நிரப்புவதில் பிரச்சினைகள் இருப்பதால் மக்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்காக காத்திருக்க வேண்டிய சிரமமான சூழல் உள்ளது. பல ஏடிஎம் மையங்கள் இன்னும் சீராக இயங்கவில்லை. அலுவலகப் பணிக்கு செல்பவர்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாத அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றிவரும் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டு வாடகை, மின்கட்டணம், தொலைபேசி, படிப்புக் கட்டணம், மருத்துவச் செலவுகள் போன்ற அத்தியாவசிய பொருளாதார தேவைகளை தங்கள் ஊதியத்திலிருந்தே அளிக்க வேண்டும். மாத ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து செலவு செய்வது என்பது தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். திடீரென ஏற்படும் அவசர செலவுகளை சமாளிக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.
வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாலும், ஏடிஎம் மைங்களில் பணம் பெறுவதற்கான தனி நபருக்கான அளவீடு ரூ.2,500 என்ற கட்டுப்பாடு உள்ள நிலையிலும், வேலை நாட்களில் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆசி்ரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையுள்ள 4 மாத ஊதியத்தை கையில் ரொக்கமாக வழங்கவும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கவும் தமிழக முதல்வர் உடனடியாக ஆணையிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.