Wednesday, November 16, 2016
நீட் தேர்வு: அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்கொள்ளும் வகையில் தேர்வு மையங்களை தொடங்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது என்று தமிழக பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் விஜய் கோயல் தலைமையில் தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் கே.பாண்டியராஜன், அத்துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ராஜேந்திர குமார் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறியதாவது:
தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) பொருத்தமட்டில், தமிழக மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி "நீட்' தேர்வு நடத்தப்பட்டது. வரும் ஆண்டிலும் அத்தேர்வு இருக்கும். இதனால், அதை தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை தொடங்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் நீட் தேர்வை தமிழக அரசு ஆதரிக்கிறது என்று அர்த்தமல்ல. நீட் தேர்வு கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாகும்.
நீட் தேர்வை சட்ட ரீதியாக தமிழக அரசு எதிர்கொண்டுள்ளது. மத்திய அரசிடமும் பேசி வருகிறது. அடுத்த ஆண்டு நீட் தேர்வு இருக்கும் என்பது நிதர்சனம் என்பதால், தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு விளையாட்டுத் திட்டங்கள், விளையாட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளையாட்டுத் துறைத் திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசிடம் இருந்து ரூ.55 கோடி நிதி ஒதுக்க இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.