ஐந்தாம் வகுப்பு மாணவன் தனது பெயரைக்கூட எழுத முடியாத அளவுக்கு, ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் மிக மோசமாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
வரும் 2017-18 ஆம் கல்வி ஆண்டுக்கு
கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்க உத்தரவிட கோரி, திருச்சியைச் சேர்ந்த எஸ்.வி.ஐ. ஆசிரியர் கல்லூரி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
தற்போது பி.எட்., எம்.எட் படிப்புகளை வழங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு, தேசிய ஆசிரியர் கவுன்சில் எந்த கொள்கையும் இல்லாமல் இயந்திரதனமாக அனுமதி வழங்குகிறது. இதனால், நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் காளான் போல் முளைத்துள்ளன. இதன் விளைவாக, ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரைக்கூட எழுத முடியாத அளவுக்கு ஆசிரியர்களின் கற்பிக்கும் தரம் மிக மோசமாக உள்ளது.
இதற்கு 'லெட்டர் பேர்டு' கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் ஆசிரியர்கள் தான் காரணம். மேலும், தமிழகத்தில் ஆசிரியர்களின் தரம் குறைந்து காணப்படுகிறது. கல்வி வணிகமயமாக்கல் காரணமாக தமிழக மாணவர்களால் பிற மாநில மாணவர்களுடன் போட்டி போட முடியவில்லை.
எனவே, இந்த வழக்கில் தில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கவுன்சில் இயக்குநர், தமிழக உயர்க்கல்வி துறை செயலாளர், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர்களை எதிர்மனுதாரர்களாக இணைக்கிறேன்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் எத்தனை கல்லூரிகள் பி.எட்., எம்.எட் வகுப்புகளை நடத்துகின்றன? எத்தனை மாணவர்கள் வெளிவருகிறார்கள்? எத்தனை பேர் வேலையின்றி உள்ளனர்? அவர்களுக்கு என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது உள்ளிட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடர்பாக பத்து கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு மார்ச் 27 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.