நீதிமன்ற உத்தரவுப்படியே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகார்களுக்கு மறுப்புத் தெரிவித்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த விளக்கம்: ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற தேர்வு எழுதிய அனைத்துப் பிரிவினரும் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்-பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி பெறத் தேவையான தகுதி மதிப்பெண்கள் 55 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த இயலாத சூழல் இருந்து வந்தது. தமிழக அரசு எடுத்த முயற்சிகளால், இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்றம் ஆசிரியர் தகுதித் தேர்வை வரும் ஏப்ரலுக்குள் நடத்த வேண்டும் என்று மற்றொரு உத்தரவை வழங்கியது. இதனால், கடந்த பிப்ரவரியில் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. வரும் கல்வியாண்டுக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டியிருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்குத் தயாராவோர் அதற்கான தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குழப்ப வேண்டாம்: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஏறத்தாழ 10 லட்சம் இளைஞர்கள் முனைப்போடு தயார் செய்து வருகிறார்கள். அவர்களைக் குழப்பும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கை விடுவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் நலன், சிறுபான்மையினர் பள்ளிகளின் நலன், படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருப்போரின் நலன் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டே இப்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் இதுபோன்ற அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளது மிகுந்த வருத்தத்தையும், மன வேதனையையும் தருகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.