WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 11, 2018

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு : வங்கக்கடலில் உருவானது, 'கஜா' புயல்.

   
வங்க கடலில், நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி 'கஜா' புயலாக உருவெடுத்தது என, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், வரும், 14ம் தேதியில் இருந்து, தமிழகத்தில் பருவ மழை தீவிரமடையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன், நேற்று அளித்த பேட்டி:

வங்கக் கடலில், அந்தமான் பகுதியில் நிலவிய, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று வலுவடைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது, வடக்கு அந்தமான் பகுதியில், மையம் கொண்டுள்ளது. இது, அடுத்து வரும் நாட்களில், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, அடுத்த, 48 மணி நேரத்தில், புயலாக மாற வாய்ப்புள்ளது. பின், மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, 14ம் தேதி இரவு, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும், எனவே, 14ம் தேதி மாலையில் இருந்து, வட தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில், மிதமான மற்றும் கன மழை பெய்யக் கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், 12ம் தேதி இரவுக்குள், கரைக்கு திரும்ப வேண்டும். மேலும், குமரிக் கடல்,



இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில், வளி மண்டலம் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில், ஒரு சில இடங்களில், லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில், அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புயல், சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இப்புயலுக்கு, இலங்கை சார்பில், 'கஜா' என, பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் காரணமாக, வரும், 14ம் தேதி முதல், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில், மழையை எதிர்பார்க்கலாம். காற்றின் திசை மாறினால், இதில் மாற்றம் ஏற்படலாம் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 'கஜா' புயல், 'வர்தா' புயல்போல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். வரும், 16ம் தேதி, கடலுார் -பரங்கிப்பேட்டை இடையே, கரையை கடக்கலாம் என, ஐரோப்பிய வானியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். 

புயல் கூண்டு ஏற்றம்! :


அந்தமான் கடல் பகுதியில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே, 1,350 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக, சென்னை, கடலுார், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், ராமேஸ்வரம், குளச்சல், துாத்துக்குடி உள்ளிட்ட, 11 துறைமுகங்களில், துார புயல் முன்னெச்சரிக்கை, 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 'கடல் சீற்றமாக இருப்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.


14, 15ல், 'லீவு'- மின் வாரியம் தடை :


கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து, வரும், 14, 15ல், பொறியாளர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்குமாறு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள, மின் திட்டமிடல் தலைமை பொறியாளர், நேற்று, மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடலோர மாவட்டங்களில், 14, 15ம் தேதிகளில், கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின்போது, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் அலுவலகத்தில் இருப்பதுடன், அவசர கால நடவடிக்கைக்காக, விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும். 

தேவையான உபகரணங்களை, தயார் நிலையில் வைப்பதுடன், மின் கம்பங்களை, தேவைப்படும் இடங்களுக்கு, உடனே எடுத்து செல்ல தயாராக இருக்க வேண்டும். சேதமடைந்த சாதனங்களை அகற்ற, ஜே.சி.பி., இயந்திர உரிமையாளர்கள், ஊழியர்களை தங்கவைக்க, திருமண மண்டப உரிமையாளர்களின் மொபைல் போன் எண்களை, வைத்திருக்க வேண்டும். அலுவலக மற்றும் வாடகை வாகனங்களையும், தயாராக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில் வங்க கடலில் கஜா புயல் உருவானது. இது அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.