அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக,
ஒரே இடத்தில், பல பேராசிரியர்கள் பணிபுரிந்து, குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. 8,500 உதவி, இணை பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஜூலையில் விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடக்கும். இந்த ஆண்டு கல்லுாரிகள் திறந்து, முதல் பருவத்தேர்வு வந்து விட்ட நிலையில், இன்னும் கலந்தாய்வை நடத்தவில்லை.அதே நேரத்தில், செல்வாக்குள்ள பேராசிரியர்கள் மட்டும், தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு, 'டிரான்ஸ்பர்' வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில பேராசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே கல்லுாரியில் பணி புரிவதாகவும், அவர்களால் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, கல்லுாரி கல்வி இயக்ககத்துக்கும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதில், ஒரே கல்லுாரியில், பல ஆண்டுகளாக பணியாற்றும் சில பேராசிரியர்கள், கல்லுாரியில், 'சிண்டிகேட்' அமைத்து, குறுநில மன்னர் போல் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:
ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்துவது இல்லை. கல்லுாரி வேலை நேரங்களில் பணியில் இல்லாமல், சொந்த தொழில் பார்க்க சென்று விடுகின்றனர். கேள்வி கேட்கும், கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களை, தங்கள் செல்வாக்கால் சமாளிக்கின்றனர். மாணவர் சேர்க்கை, தேர்வுத்தாள் திருத்தம், உதவித்தொகை வினியோகத்திலும் தலையிட்டு ஆதாயம் தேடுகின்றனர். அதனால், உயர்கல்வித்துறை விசாரணை நடத்தி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பேராசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாணவர் அமைப்பினர் கூறும்போது,
'சில பேராசிரியர்கள் அரசு கல்லுாரி மாணவர்களை கோஷ்டியாக பிரித்து, பிரச்னையை துாண்டி விடுகின்றனர். அதன் மூலம் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தி, கல்லுாரி முதல்வருக்கு நெருக்கடி தருவதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது' என்றனர்.
உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,
'இந்த பிரச்னை அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. நீண்ட காலமாக, ஒரே கல்லுாரியில் பணியாற்றும் பேராசிரியர்களை விரைவில் களையெடுக்க பட்டியல் தயாரிக்கப்படுகிறது' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.