சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
அனைவருக்கும் தரமான கல்வி வழங்கிட வேண்டுமெனில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாணவ மாணவியரின் இடைநிற்றலை குறைத்திட வேண்டும். மாணாக்கர்களின் கற்கும் திறன் உயர்த்தப்பட வேண்டும். இவையெல்லாம் நிறைவேற்றிட வேண்டும் என்ற காரணத்தால் தான், கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கென 84,568 கோடி ரூபாய் எனது அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 39,058 கோடி ரூபாய் தான்.
அதாவது இந்த 5 ஆண்டுகளில் எனது ஆட்சியில் கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஒதுக்கியதைவிட 116 சதவீத உயர் அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் தொடக்க கல்வி, நடுநிலைக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி என அனைத்து நிலைகளிலும் சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது; இடைநிற்றல் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
இவற்றிற்குக் காரணம் இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தான். கடந்த 56 மாதங்களில் 26.96 லட்சம் பள்ளி மாணவ-மாணவியருக்கு 4,723 கோடி ரூபாய் செலவில், விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை இடை நிற்றல் இன்றித் தொடர சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் எனது அரசால் அறிமுகம் செய்யப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மொத்தம் 5,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக அவர்களின் பெயரில் முதலீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஐந்தாண்டுகளில் 1 கோடியே 13 லட்சத்து 76 ஆயிரம் மாணவ, மாணவியர் 1,810 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாகப் பெற்று பயனடைந்துள்ளனர்.
2010–2011 ஆம் ஆண்டு ஒரு இணைச் சீருடை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவ-மாணவியருக்கு 4 இணைச் சீருடை வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இதற்கென 1,698 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கப்படுகின்றன. 2012–2013ஆம் ஆண்டு முதல் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அவை வழங்கப்பட்டு வருகின்றன.
விலையில்லா புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், நிலவரைபட புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், வழங்கும் திட்டம் 2012–13ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே ஓர் இணைக் காலணிகள் வழங்கும் திட்டம் 2012–2013ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவையன்றி, விலையில்லா மிதிவண்டிகள், கட்டண மில்லாப் பேருந்து பயணச் சலுகை, சத்தான மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அதிக செலவிலான தனியார் பள்ளிகளை நாடுவதற்கான முக்கிய காரணம் ஆங்கில வழி போதனை என்பதால், அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் பொருட்டு தேவைக்கேற்ப 12,092 ஆங்கில வழிப் பிரிவுகள், ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2.64 லட்சம் மாணாக்கர்கள் இதில் பயின்று வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 221 தொடக்கப் பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன; 112 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக வும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தேவைக்கேற்ப பள்ளிகளை அமைப்பதோடு, பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை வழங்கிடவும் எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது. கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், மாற்றுத் திறனாளிகளுக்கென சாய்வு தளங்கள் ஆண்/பெண் குழந்தைகளுக்கென தனித்தனியே கழிவறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 4,166 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிறந்த கல்வி வழங்கப்பட ஆசிரியர்கள் காலத்தே நியமிக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14,711 ஆசிரியர் அல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வியில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு முன்னோடி திட்டங்களின், காரணமாகத் தான் தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் ஒரு சிறந்த மாநிலமாக திகழ்கிறது.
உயர் கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பதை நான் முதலில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். 2011ஆம் ஆண்டு உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அப்போது இந்திய அளவில் இந்த சதவீதம் 15 என இருந்தது. தற்போது இந்திய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை 23.6 சதவீதம் என்று உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இது 44.8 என்ற சதவீதத்தை அடைந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
அதாவது, இந்திய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் 8.6 சதவீத அளவிற்கே உயர் கல்வி மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் இது 26.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகைய மகத்தான வளர்ச்சிக்கு காரணம் எனது தலைமையிலான அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தான் என்பதை, நான் இங்கே உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியிலும், தற்போதும் உயர்கல்வி தொடர்பான சில புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டால் தற்போது நான் தெரிவித்த வியத்தகு சாதனை எப்படி சாத்தியமாயிற்று என்று புலப்படும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் பேசினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.