பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 5 வினாக்கள் குழப்பமான முறையில் கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் இந்தப் பாடத்தில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 200-க்கு
200 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான இயற்பியல் தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) நடைபெற்றது. பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளை தேர்வு செய்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணை தீர்மானிக்கும் பாடங்களில் இயற்பியல் பாடமும் ஒன்றாகும். இந்த நிலையில் நிகழாண்டு தேர்வு குறித்து சென்னை கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய டி.ஆர். சில்வியா, பி.ராஜேஸ்வரி உள்ளிட்ட மாணவிகள் கூறியது: கடந்த சில ஆண்டுகளாக இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக கேட்கப்படுகின்றன. இதை கருத்தில்கொண்டு அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். இருப்பினும், நிகழாண்டு வினாத்தாளில் பகுதி 1 -இல் (ஒரு மதிப்பெண்) ஐந்து கேள்விகள் சற்று குழப்பமான வகையில் கேட்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு யோசித்து பதிலளிக்க அதிகநேரம் செலவிட வேண்டியிருந்தது. ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தேர்வு எளிதாக இருந்தது. அதே நேரத்தில் 190 -க்கும் மேல் மதிப்பெண் பெறுவதே சற்று சிரமம்தான் என்றனர். பொருள் மாறுபடாமல்... இதுகுறித்து வேலூர் மாவட்டம் கொனவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் கே.சங்கர் கூறியது: மாணவர்கள் குறிப்பிட்ட 5 கேள்விகளும் நேரடியாகக் கேட்கப்படாமல், மறைமுகமாகக் கேட்கப்பட்டிருந்தன. அதனால் நன்கு படிக்கும் மாணவர்களுக்குக்கூட அவை சற்று கடினமாக இருந்திருக்கக் கூடும். அதனால் இயற்பியலில் 200 -க்கு 200 மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், 10 மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்டிருந்த எளிதான கேள்விகளால், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இயற்பியலில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது என்றார். திருச்சியில் 9 பேர்: இதனிடையே, பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் பெரம்பலூர், திருச்சி, கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் உள்பட காப்பியடித்ததாக 31 மாணவர்கள் பிடிபட்டனர். அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 9 மாணவர்கள் பிடிபட்டனர் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.